திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை வரும் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தி.மு.க. சார்பில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. சார்பில் அம்மன் டி. நாராயணன், தே.மு.தி.க. சார்பில் கோமதி ஆ. கணேசன் மற்றும் 22 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் செலவு கணக்குகளை முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. அதன்படி வரும் 22-ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் செலவு கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யத் தவறினால் எதிர்காலத்தில் போட்டியிடத் தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.