தூத்துக்குடி விமான நிலையம் விரிவுபடுத்தும் பணிக்கு 586 ஏக்கர் கையகப்படுத்த முடிவு!
தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமானங்களும் வந்து செல்லும் வகையில் விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 586 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள வாகைகுளம் விமான நிலையம், கடந்த 1992-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. முதல் விமான சேவை 1992-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கியது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வாயுதூத் விமானம் இயக்கப்பட்டது. இந்த சேவை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது.
பின்னர் என்.இ.பி.சி. நிறுவனம் 1996 பிப்ரவரி 10-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்கியது. இந்த சேவையும் 6 மாதங்களோளோடு முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகள் தூத்துக்குடி விமான நிலையம் எந்த விமான சேவையும் இன்றி பெயரளவுக்கு விமான நிலையமாக இருந்துவந்தது. இந்நிலையில், ஏர்டெக்கான் நிறுவனம் கடந்த 2006 ஏப்ரல் 1-ம் தேதி மீண்டும் விமான சேவையைத் தொடங்கியது. ஏர்டெக்கான் நிறுவனம் பின்னர் கிங்பிஷர் நிறுவனமாக மாறியதால் தற்போது தூத்துக்குடியில் இருந்து தினமும் கிங்பிஷர் விமானம் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த விமான சேவை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னைக்கு 72 இருக்கைகள் கொண்ட கிங்பிஷர் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இந்த விமானத்தில் முழு அளவில் பயணிகள் சென்று வருகின்றனர். இந்த விமான சேவை வெற்றிகரமாக அமைந்துள்ளதால் மேலும் சில தனியார் நிறுவனங்களும் தூத்துக்குடிக்கு விமான சேவையைத் தொடங்க ஆர்வமாக உள்ளன. சில நிறுவனங்கள் இது தொடர்பாக ஆய்வுகளையும் நடத்தியுள்ளன. ஆனால், தூத்துக்குடி விமான நிலையம் சிறிய அளவில் இருப்பதாலும், போதுமான வசதிகள் இல்லாததாலும் மேற்கொண்டு விமான சேவைகள் தொடங்கப்படவில்லை.
இதையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்தது. இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி தருமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையம், மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டது.
அதன்பேரில், விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் தனியாரிடம் இருந்து 586 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ. 30.50 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும். மாநில அரசு நிர்வாக அனுமதி அளித்த பின்னர் தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தின் தற்போதைய ஓடுதளம் 1,351 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இது 4.5 கி.மீ. தொலைவு உள்ளதாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்களை இயக்க முடியும். மொத்தத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச விமான நிலையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.