தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுப்பதற்கான முகாம்களை 10.01.2010 மற்றும் 7.02.2010 ஆகிய தேதிகளில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக இன்று 5 வயதுக்கு உட்பட்ட 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,062 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று போலியோ சொட்டு மருந்து முகாமை புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மையத்தில் வைத்து, மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தலைமை வகித்தார்.துறைமுக சபை உறுப்பினர் பெரியசாமி, மாநகர மேயர் கஸ்தூரி தங்கம், சுகாதாரப்பணி துணை இயக்குனர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, பள்ளிக்கூடம், சத்துணவு மையங்கள், சமுதாய நலக்கூடம்,பேருந்து நிலையம்,ரயில் நிலையம் ஆகியவற்றில் போலியோ சொட்டு மருத்து கொடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.