தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தூத்துகுடி மக்கள் தயாராகி வருகின்றனர். இதனால், தூத்துக்குடி மார்க்கெட் மற்றும் கடை வீதிகள் வியாபாரம் களைகட்டத் துவங்கியுள்ளது.
ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு என இரட்டிப்பு மகிழ்ச்சியோடு வருகின்றது. இந்த வேளையில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சல், நெல், வாழை மற்றும் அனைத்து காய்கறிகளின் வியாபாரமும் தூத்துக்குடி மார்க்கெட் மற்றும் கடைகளில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
கரும்பு ஒன்று 15ரூபாய் முதல் 20ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தேனி, ராஜபாளையம், ஈரோடு, கம்பம், மதுரை, கொடுமுடி போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை நடந்துவருகின்றது. மஞ்சள் குலைகளும் விற்பனைக்காக கடைவீதிகளில் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளன. மஞ்சள் குலைகள் 10ரூபாயிலிருந்து அதற்கு மேற்பட்ட விலைகளில் விற்கப்பட்டுவருகிறது.
சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் பொங்கல் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. பெரும்பாலான கிராமங்களில் பொங்கலையொட்டி நடக்கும் மாட்டு வண்டி பந்தயங்கள், விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன.