தேர்தலில் காட்டும் அக்கறையை வறுமை ஒழிப்பில் காட்டுவது இல்லை: விஜயகாந்த்
ஆட்சியாளர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு காட்டுகின்ற அக்கறையை வறுமை ஒழிப்பில் காட்டுவது இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்புக்கான எந்த திட்டமும் ஆளுநர் உரையில் இல்லை. உலகில் உள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். தமிழ்நாட்டில் நான்கில் ஒருவர் ஏழையாக உள்ளனர். அரசு தரப்பில் இந்த புள்ளி விவரங்கள் கூட நம்பத் தகுந்ததல்ல. உண்மையில் இதை விட கூடுதலான எண்ணிக்கையிலேயே ஏழைகள் உள்ளனர்.
ஆட்சியாளர்கள் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு காட்டுகின்ற அக்கறையை வறுமை ஒழிப்பில் காட்டுவது இல்லை. இலங்கை தமிழின படுகொலையை பற்றி ஆளுநர் தனது உரையில் கண்டனமோ, குறைந்தபட்ச வருத்தமோ தெரிவிக்காதது பல அர்த்தங்களை கொண்டதாகும். மக்கள் பிரச்சனைகளுக்கு ஆளுநர் உரையில் எந்த தீர்வும் இல்லை. உணவு பொருட்களை கடத்துவதன் காரணமாக ரூ.1,200 கோடியாக இருந்த மானியம் இன்று ரூ.4 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதுதான் இந்த ஆட்சியின் விசித்திரமாக சாதனை.
மொத்தத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களோடு மேலும் சில திட்டங்களை சேர்த்து அவற்றின் தொகுப்புரையாக மட்டுமே ஆளுநர் உரை உள்ளது. ஆளுங்கட்சியினருக்கு ஆளுநர் உரை காமதேனுவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கோ அது ஒரு கசக்கும் எட்டிக்கனியாகவே உள்ளது என்று விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.