நெல்லை சிஐடி சப்.இன்ஸ்பெக்டர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை தாமிரபதி காலனியைச் சேர்ந்தவர் முரளி (35). நெல்லை எஸ்பி சிஐடி பிரிவில் சப்.இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மதுரையைச் சேர்ந்த இவர் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த இந்திரா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் பி.எல். படிப்பும் படித்துள்ளார். தற்போது தச்சநல்லூர் பகுதி சிஐடி சப்.இன்ஸ்பெக்டராக இருந்தார். மனைவி, குழந்தைகள் ஊருக்கு சென்றுள்ள நிலையில் முரளி நேற்று 12 மணி அளவில் தாமிரபதி காலனியிலுள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். எஸ்பி சிஐடி இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் முரளி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை. குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.