இந்திய வீரர் சேவாக் அதிரடியாக ஆடி ரன்குவித்து வருகிறார். இது உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்களை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகள் இந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரராக சேவாக் திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளன.
முன்னாள் இங்கிலாந்து வீரர் டெரிக் பிரிங்கிள் கூறியிருப்பதாவது: அதிரடியாக ஆட்டத்தை தொடங்கும் வீரர்கள் நம்மிடம் பலர் இருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக அதிரடி காட்டுபவர் சேவாக் மட்டும்தான். இரண்டு 300, நான்கு 200 ரன்களை 72 டெஸ்ட் போட்டிகளில் எட்டி சாதனை படைத்திருக்கிறார்.
இவரை போல் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் சிறப்பாக விளையாடுவார். ஆனால் சேவாக் போல் தொடர்ச்சியாக ஆடமாட்டார். இந்த தேர்வு சர்ச்சையை கிளப்பலாம். ஆனால் வார்னே, முரளீதரன், காலிஸ், சச்சின் ஆகியோர் கடந்த 10 வருடங்கள் சிறப்பாக விளையாடினார்கள். 90க்கு பின் 2000ம் ஆண்டுக்குள் அவர்களது ஆட்டம் இருந்தது. எனவே அவர்கள் நமது கணக்கில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்கள்.
தற்போது பான்டிங், பீட்டர்சன் ஆகியோர் சேவாக்குடன் போட்டியிட்டார்கள். ஆனால் இவர்கள் யாரையுமே அவரிடம் ஒப்பிடக்கூடாது. அந்தளவுக்கு அவர் ஒவ்வொரு பந்துக்கும் ரன்குவித்து வருகிறார். பந்துவீச்சாளர்களை பயம்காட்டுகிறார். 100 ரன்னுக்காக அவர் போராடவில்லை. ஒவ்வொரு பந்துக்காக ஆடுகிறார். ரசிகர்களுக்காக ஆடுகிறார் என்றார்.