ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லால் சவுக்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் புகுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 லஸ்கர்-ஈ-தோய்பா தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்தத் தாக்குதலில் ஒரு காவலரும், மற்றொருவரும் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியின் பெயர் காரி என்றும், மற்றொருவர் சோப்பூரைச் சேர்ந்த உஸ்மான் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
லால் சவுக் பகுதியில் மிகவும் பரபரப்பு நிறைந்த பகுதியில் இருப்பது ஹோட்டல் பஞ்சாப். இங்கு நேற்று புகுந்த தீவிரவாதிகள், கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை ஹோட்டலின் மேல் மாடிக்குள் ஒளிந்து கொண்டு தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நண்பகலில் ஹோட்டலில் புகுந்த பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். அருகில் உள்ள கட்டிடங்கள் உள்ளவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.