ராஜபட்ஷே தங்கை திருச்செந்தூர் கோயிலில் தரிசனம்: நாம் தமிழர் அமைப்பு எதிர்ப்பு
இலங்கை அதிபர் ராஜபட்சவின் தங்கை நிருபமா மற்றும் அவரது கணவர் திருக்குமர நடேசன் உள்ளிட்ட உறவினர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு வந்தனர். நாம் தமிழர் இயக்கம் சார்பில் அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜபட்சவின் தங்கை கணவர் திருக்குமர நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூருக்கு தரிசனம் செய்ய வந்து செல்கிறார். இந்நிலையில், அவர் தனது மனைவி நிருபமா மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு திருச்செந்தூர் வந்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சண்முகர் அர்ச்சனை செய்தார். பின்னர், அனைவரும் தனியார் விடுதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்தனர். இந்நிலையில், அவருக்கு நாம் தமிழர் இயக்கம் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, டிஎஸ்பி நடராஜமூர்த்தி தலைமையில் கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால், யாரும் போராட்டம் செய்ய வரவில்லை.இன்று திருச்செந்தூரில் திருக்குமர நடேசன், நிருபமா ஆகியோர் சிறப்பு யாகம் நடத்த உள்ளனர்.