News

அதிக நேரம் செல்போனில் பேசுகிறீர்களா? கவனம் தேவை
March 30, 2009, 5:34 PM

செல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறது.

தவிர, சாலைகளில் செல்லும்போது சிலர் செல்போன்களில் பேசியவாறே நடந்து செல்வதும், எதிரே வரும் வாகனங்களைப் பார்க்காமல் சாலைகளைக் கடத்தல், ரயில் தண்டவாளங்களைக் கடத்த்ல் போன்றவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன.

தவிர, சிலர் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவாறே செல்போனிலும் பேசிக் கொண்டிருப்பர். மறுமுனையில் பேசுபவர் என்ன மாதிரியான விஷயம் பற்றி பேசுகிறாரோ, அதனை பொருத்து வாகனத்தில் செல்பவரின் சாலை மீதான கவனம் சிதறக் கூடும். எனவே செல்போன் என்பது தகவல்களை பரிமாறிக் கொள்ள மட்டுமே என்பதை ஆண்/பெண் என இருபாலரும் உணர வேண்டும்.

கூடிய வரை சாலைகளில் செல்லும் போது பேசுவதைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு, பேசி முடித்த பின் செல்லலாம். தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். வாழ்க்கையை தொலைத்தால், மீண்டும் பெற முடியுமா? என்பதை, அவர்கள் உணர வேண்டும்.

Sivaram, Tuticorin

Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.