News

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... பார்ப்பதற்கு தகுதியான ஒரு படம்!
October 3, 2009, 10:16 AM
 
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்திற்கு அண்ணாமலை பார்ட் டூ என்று பெயர் வைத்திருக்கலாம். தமிழ் ரசிகர்களின் ஞாபகசக்தியை இத்தனை மட்டமாக எடை போட்ட இயக்குனர் வேறு யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அண்ணாமலையை உட்டாலங்கடி செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. மழையில் இடுப்பு துண்டுடன் ரம்யாவுக்கு பரத் சவால்விடும் காட்சியை கூடவா மாற்றக் கூடாது?

பரத் பரம ஏழை. ரம்யா கிருஷ்ணன் கோடீஸ்வ‌ரி. சொல்லி வைத்த மாதி‌ரி ரம்யா கிருஷ்ணனின் தம்பிக்கும், பரத்துக்கும் இடையில் அப்படியொரு நட்பு. இந்த ஏற்றத் தாழ்வு நட்பு ரம்யாவுக்கு பிடிக்கவில்லை. சதி செய்து நண்பர்களை பி‌ரிக்கிறார். கூடவே பரத்தின் நிலத்தை ஏமாற்றி அபக‌ரிப்பவர் அதில் இருக்கும் பரத்தின் அம்மாவின் கல்லறையையும் இடிக்கப் பார்க்கிறார்.

பொங்கியெழும் பரத், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகி, ரம்யா கிருஷ்ணனை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார். ஹீரோவல்லவா... ரம்யாவுக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவர்கள் இழந்ததை அவர்களுக்கே திருப்பித் தருகிறார். ரம்யா கிருஷ்ணனும் பரத் அம்மாவின் கல்லறையில் மன்னிப்பு கேட்க, சுபம்.

ஒரே பாடலில் ஹீரோ கோடீஸ்வரனாவது, தெருவோரம் இட்லி விற்பவனுக்கு உலக அழகி ரேஞ்சில் காதலி இருப்பது, கடைசி நிமிடத்தில் வில்லி மனம் திருந்துவது... யப்பா, எந்த காலத்துலப்பா இருக்கீங்க? இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்ப்பதற்கு தகுதியான படம். மற்றபடி காலத்தையும், பணத்தையும் விரயம் செய்யாதீர்.


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.