News

கண்டேன் காதலை: க்ளீன் எண்டர்டெயின்மெண்ட்!
October 31, 2009, 11:19 AM
 
முன் பின் அறிமுகமில்லாத பரத்தும் தமன்னாவும் எதேச்சையாக ரயிலில் சந்திக்கிறார்கள். சினேகமாகிறார்கள். வாழ்க்கையில் தோல்வியுற்று இலக்கில்லாமல் பயணிக்கும் பரத்துக்கு தமன்னாவின் நட்பு, சில ஆரம்ப அறுவைகளுக்குப் பிறகு பிடித்துப் போக, அவரது ஊரான தேனிக்குப் போகிறார்.

இன்னொரு பக்கம் முன்னாவைக் காதலிக்கிறார் தமன்னா. தன் வீட்டாரிடம் அதைச் சொல்லத்தான் தேனிக்கும் வருகிறார். ஆனால் வந்த இடத்தில் அவருக்கும் முறைமாமன் சந்தானத்துக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

எனவே சொல்லாமல் கொள்ளாமல் பரத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் தமன்னா. அவர் தன் காதலன் முன்னாவைத் தேடிப் போக, பரத் தன் வாழ்க்கையைத் தேடிப் போகிறார், ஜெயிக்கிறார். ஆனால் தமன்னா என்ன ஆனார் என்று தெரியாமல் அவர் வீட்டார் தவிக்கிறார்கள். பரத் மீது சந்தேகப்படுகிறார்கள்.

ஆனால் மீண்டும் தமன்னா வருகிறார் பரத்தின் வாழ்க்கையில். இடையில் அவர் எங்கிருந்தார்? காதல் என்ன ஆனது? பரத்துடன் அவர் வாழ்க்கையில் இணைந்தாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை பெரிய திருப்பங்கள் எதுவுமின்றி, ஆனால் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்திப் படத்தைப் பார்த்துவிட்டவர்கள், நிச்சயம் இந்தப் படத்தில் எக்கச்சக்கமாய் குறை சொல்லக் கூடும். காரணம், ஒரிஜினல் படத்தில் இருக்கும் இயல்பான காட்சி அமைப்புகள் மற்றும் கரீனா கபூர். பார்க்காதவர்களுக்கு நிச்சம் இந்தப் படம் ஒரு ரிலீஃபாக இருக்கும்.

படத்தின் நாயகன் பரத்தா.. சந்தானமா என்று கேட்குமளவு சந்தானம் கலக்கியிருக்கிறார். அவர் அறிமுகமாகும்போதே தியேட்டரில் விசில் பறக்கிறது. அவரும் காட்சிக்கு காட்சி கவுண்டர் பாணியில், காமெடி சரவெடி கொளுத்தியிருக்கிறார்.

கலக்க நிறைய ஸ்கோப் இருந்தும் பரத் அவற்றை வீணடித்துள்ளார். பல காட்சிகளில் ரொம்பவே செயற்கைத்தனம்... ஆனாலும் தமன்னா மீதான காதலை அவர் சொல்ல முயலும் காட்சிகள் ஓகே.

தேவர் வீட்டுப் பெண்ணாக வரும் தமன்னா அழகாக இருக்கிறார். நிச்சயம் இதைவிட பெட்டராக வேறு யாராலும் செய்திருக்க முடியாது. ஆனால் வாய்க்கு கொஞ்சம் பூட்டுப் போட்டிருக்கலாம். தாங்க முடியல...

சிங்க முத்து, மனோபாலா, ரவிச்சந்திரன், முன்னா, நிழல்கள் ரவி என நிறைய நட்சத்திரங்கள். அவரவர் பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

வித்யாசாகர் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்று தெரிகிறது. பின்னணி இசையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பிஜி முத்தையாவின் காமிரா, பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் முதல்தரம்.

படத்தில் அதிரடித் திருப்பங்கள், அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாத திரைக்கதை இல்லை என்றாலும், ஒரு 'க்ளீன் எண்டர்டெயின்மெண்ட்' என்ற வகையில் குடும்பத்தோடு பார்த்து சிரித்துவிட்டு வர இந்தப் படத்தை சிபாரிசு செய்யலாம்!

நடிகர்கள்: பரத், சந்தானம், தமன்னா, சிங்கமுத்து, இசை: வித்யாசாகர், ஒளிப்பதிவு: பிஜி முத்தையா, தயாரிப்பு: மோசர் பேர் எண்டர்டெயின்மெண்ட், இயக்குநர்: ஆர் கண்ணன்


Terms of Use -  DisClaimer  -  Link to Us
Copyright © 2008 TutyOnline.com. All rights reserved.